Sunday 30 September 2012

கிராம்பு பயன்கள்


சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களில் ஒன்றான கிராம்பு மருத்துவப் பொருளாகவும் பயன்படுகிறது.. இதில் யூனினால், பைனின், வேனிலின், போன்ற ஆவியாகும் எண்ணெய்ப் பொருட்களும், பிசின் மற்றும் டேனின்கள் உள்ளன.

இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
பல்வலி போக்கும்
உடல் மற்றும் உள்ளத்தினை ஊக்குவிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தும், மகப்போறு காலத்தில் கருப்பையின் வலிமைக்கும் சுருங்கி விரிவதற்கும் உதவுகிறது. பல்வலி, மற்றும் சொத்தைப்பற்களின் பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது. கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.. கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
உடல்வலி நீங்கும்
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. அஜீரணம், வாயுத்தொல்லை, வாந்தி, இருமல், அடிவயிற்று வலி, தொண்டைகம்மல், மூக்கு ஒழுகல், தலைவலி ஆகியவற்றில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.. கிராம்பு எண்ணெய் மேல் பூச்சாக அடி, இடுப்பு வலி, மூட்டுவலி, மற்றும் தொடை,நரம்பு வலி ஆகியவற்றிர்க்கு நல்ல பலன் தருகிறது. தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
தொண்டை எரிச்சல் நீங்கும்
உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சேர்த்து சாப்பிட தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
ஆஸ்துமா கட்டுப்படும்
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது



ன்றாட உணவில் நாம்சேர்க்கும் பொருட்கள் அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. நோய் வரும்முன் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ இவையும் பக்கபலமாக உதவிவருகின்றன.

ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.

நம் முன்னோர்கள் அறிந்ததை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இதழிலும் நம்ம மண்ணு நம்ம மருந்து என்ற தலைப்பில் ஒவ்வொன்றையும் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் இலவங்கம் என்று அழைக்கப்படும் கிராம்பு பற்றி தெரிந்துகொள்வோம்.

கிராம்பு இந்தோனேசியாவில் 80 சதவிகிதம் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் விளைகிறது. 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது.

இந்திய சமையலில் கிராம்பு அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. பிரியாணி உணவில் அதிகம் சேர்க்கிறார்கள். சீன வகை உணவிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.

இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு.

Tamil                  - Kirambu

English               - cloves tree

Sanskrit              - Lavanga

Telugu                - Lavangamu

Malayalam         - Krambu

Hindi                   - Laung

Botanical name - Syzygium aromaticum


பித்த மயக்கம் பேதியொடு வாந்தியும்போம்

சுத்த விரத் தக்கடுப்புத் தோன்றுமோ மெத்த

இலவங்கங் கொண்ட வருக் கேற் சுகமாகும்

மலமங்கே கட்டுமென வாழ்த்து.

சுக்கிலநட் டங்கர்ண சூர்வியங்க லாஞ்சனந்தாட்

சிக்கல்விடாச் சர்வா சியப்பிணியுமக்குக்குட்

டங்கப் பவோடு தரிபடருந் தோன்றிலில்

வங்கப்பூ வோடுரைத்து வா

அகத்தியர் குணபாடம்

பசியைத் தூண்ட

சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல் தோன்றும். இவர்களுக்கு பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.

பித்தம் குறைய

வாதம், பித்தம், கபம் என்ற முக்குற்றத்தால் தான் மனித உடலின் செயல்பாடுகள் அனைத்தும் அமைந்துள்ளன. இதில் எதன் நிலை மாறினாலும் உடலில் பாதிப்புகள் ஏற்படும். இவற்றில் அதிகம் நிலைமாறுவது பித்த நீர்தான். பித்த அதிகரிப்பு ஏற்பட்டு உடலில் பல நோய்கள் உண்டாகும். இந்நிலை மாற கிராம்பு சிறந்த மருந்தாகும். 

பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறக்கினால் பித்தம் குறையும்.

பல்வலி நீங்க

பல் வலியால் அவதிப்படுபவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்துவார்கள். இது தொடர்ந்தால் பல பக்க விளைவுகள் உண்டாகும். சொத்தைப்பல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிராம்பே உடனடி நிவாரணி. 

கிராம்பை நசுக்கி பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி உடனே குணமாகும். ஆனால் இது நிரந்தர தீர்வல்ல. உடனே மருத்துவரை அணுகி தகுந்த மருத்துவம் செய்துகொள்வது நல்லது.

வாந்தி நிற்க

பேருந்துகளில் பயணம் செய்பவர்களக்கு சில சமயங்களில் வாந்தி ஏற்படும். மலை ஏறுபவர்கள் சிலக்கு வாந்தி உண்டாகும். இவர்கள் கிராம்பை வாயில் போட்டு இலேசாக மென்று சாறை உள்ளே இறக்கினால் வாந்தி நிற்கும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாக

வயிற்றில் புண் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இவர்கள் கிராம்பை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

வறட்டு இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி அருந்தி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.v சீன மருத்துவத்தில் கிராம்பின் பங்கு அதிகம். சிறுநீரகம், மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கிரம்பையே அதிகம் பயன் படுத்துகின்றனர்.

தலைபாரம் நீங்க 

கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டு வந்தால் தலையில் கட்டிய நீர் இறங்கி தலைபாரம் குறையும்

தொண்டைப்புண் ஆற

கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைத்து சாறு இறக்கினால் தொண்டைப்புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும்.

கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் அசதி நீங்கும். சுரத்திற்குப் பின் உண்டாகும் களைப்பைப் போக்கும்.

கிராம்பு, சுக்கு வகைக்கு 5 கிராம் எடுத்து அதனுடன் ஓமம், இந்துப்பு வகைக்கு 6 கிராம் எடுத்து சூரணம் செய்து தேனுடன் கலந்து கொடுத்தால் உணவு நன்றாக செரிமானமாகும்.

தோலில் உண்டாகும் படைகளுக்கு

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப் போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.

கிராம்புத் தைலம்

கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயே கிராம்பு தைலம் என்று அழைக்கப்படுகிறது. இது நல்ல மணமுள்ளதாக இருக்கும். நாவில் பட்டால் உடனே சிவக்கும். இந்த கிராம்பு தைலத்தை பஞ்சில் நனைத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும்.



No comments:

J.ELANGOVAN.TRICHY